காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 7,000-க்கும் மேற்பட்டோரின் தகவல்கள் சேகரிப்பு – காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்

யாழ்ப்பாணம்: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7,000-க்கும் மேற்பட்டோரின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தீவிரமாகவும் சட்டப்பூர்வமாகவும் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) வழிகாட்டுதல்களுக்கு அமைய தனது பணிகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கினாலும், இந்த அலுவலகம் எந்தவொரு இராணுவ அமைப்பு, பொலிஸ் துறை அல்லது அரசியல் தரப்பிற்கும் சார்பாக செயல்படாத சுயாதீன ஆணைக்குழுவாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து, பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே அலுவலகத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது பொதுமக்கள் மத்தியில் OMP தொடர்பாக நேர்மறையான நம்பிக்கை உருவாகி வருவதால், மாவட்ட மட்டங்களில் நடத்தப்படும் அமர்வுகளுக்கு மக்கள் அதிகளவில் பங்கேற்று வருவதாகவும் கூறினார்.
தினசரி சுமார் 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், 85-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரில் வருகை தந்து சாட்சியங்கள் மற்றும் தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களிடையே காணப்படும் தவறான புரிதல்களை நீக்கி, உண்மை தகவல்களை சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.




