இலங்கை ஜெனீவாவில் நடைபெறும் 114வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்பு

தொழில் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, இன்று (01) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமான 114வது ஆண்டு சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் (ILC) பங்கேற்று வருகின்றது.
International Labour Organization (ILO) ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாடு “சமூக நீதியை முன்னேற்றுதல், நியாயமான வேலை வாய்ப்பை ஊக்குவித்தல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்று, 12 ஆம் திகதி வரை தொடரவுள்ளது. இதில் 187 உறுப்புநாடுகளின் அரசாங்கங்கள், தொழில்துறை முதலாளிகள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
“தொழிலாளர் பாராளுமன்றம்” என அறியப்படும் இந்த மாநாட்டில், டிஜிட்டல் மற்றும் தள பொருளாதாரத்தில் நியாயமான வேலைவாய்ப்பு, பாலின சமத்துவம், சமூக உரையாடல் மற்றும் அரசாங்கங்கள்–முதலாளிகள்–தொழிலாளர்கள் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கையின் பங்கேற்பு, சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் தொடர்பான அனுபவங்களை பகிரவும், புதிய வேலைவாய்ப்பு சவால்கள் குறித்த உலகளாவிய விவாதங்களில் பங்களிக்கவும், மேலும் நியாயமான வேலை சூழல், சமூக நீதி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான நாட்டின் முயற்சிகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது.
இலங்கை பிரதிநிதிகள் குழுவில் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ, தொழில் ஆணையாளர் நாயகம் நதிகா வட்டலியத்த உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.




