அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இவர்கள் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.
நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று (17) விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையிலும் சுதந்திரமாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் பதவி விலகியுள்ளனர்.




