அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெசாக் தின வாழ்த்து செய்தி

புத்த பெருமானின் கருணை, அன்பு, அமைதி மற்றும் மனிதநேயம் ஆகிய உயரிய போதனைகள் உலக மக்களின் வாழ்வை ஒளிரச்செய்யும் அரிய வழிகாட்டுதல்களாக திகழ்கின்றன என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் R. Chandrasekar தெரிவித்துள்ளார்.
தனது வெசாக் வாழ்த்து செய்தியில் அவர் மேலும் கூறியதாவது:
இந்த புனித வெசாக் தினத்தில், அனைத்து மக்களும் சமாதானம், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் பாதையில் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இலங்கை ஒரு பல இன, பல மத நாடாக இருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவர்களின் மத உணர்வுகளை மதித்து, சகோதரத்துவ உணர்வுடன் வாழ்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கும் நிலையான அமைதிக்கும் அடிப்படையாக அமையும்.
புத்தரின் உபதேசங்கள் மனித மனங்களில் அன்பு, பொறுமை மற்றும் கருணையை வளர்க்கட்டும் என்றும், இந்த வெசாக் பண்டிகை அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் வளம் நிறைந்த நாட்களை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.




