பௌத்த சாசனத்தை பாதுகாக்க விரிவான சீர்திருத்தங்கள் அவசியம் – சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தல்

பௌத்த சாசனத்தின் நீண்டகால நிலைத்தன்மை என்பது தர்மத்தையும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும் பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது என வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி Chandrika Bandaranaike Kumaratunga, பௌத்த துறவிகள் அமைப்பிற்குள் விரிவான சீர்திருத்த வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பௌத்த சாசனத்திற்குள் நெருக்கடிகள் ஏற்பட்ட காலங்களில், மதத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் மூலமே அவை தீர்க்கப்பட்டதாக பௌத்த வரலாறு காட்டுகிறது. முதலாவது பௌத்த மாநாட்டிலிருந்து கண்டி யுகத்தில் வெலிவிட்ட ஸ்ரீசரணங்கர தேரரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் வரை இதற்கான எடுத்துக்காட்டுகளாகும். இத்தகைய முயற்சிகளே பௌத்த மதத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1956 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பௌத்த மதத்தை வலுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அவரது படுகொலைக்குப் பின்னர் அவை முழுமையடையாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் மறைந்த மடிஹே பஞ்ஞாசீஹ மகாநாயக்க தேரரின் வழிகாட்டுதலின் கீழ் முழுமையான அரசாங்க ஆதரவுடன் பௌத்த மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், சில பிக்குகள் தரப்பிலிருந்து ஏற்பட்ட எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், பௌத்த நிறுவனங்களுக்குள் நிலவும் பிரச்சினைகளால் நன்மை அடையும் குழுக்கள் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைத் தடுக்கச் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பௌத்த மதம் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடிக்கான அடிப்படை காரணங்களை அடையாளம் கண்டு, குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்காக பரந்த அளவிலான உள்நாட்டு கலந்துரையாடல் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனிப்பட்ட சம்பவங்களில் மட்டும் கவனம் செலுத்துவதோ அல்லது அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் விவாதங்களை ஒடுக்க முயற்சிப்பதோ தீர்வாகாது என்றும், பௌத்த சாசனத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் பௌத்த மாநாடு ஒன்றை ஆரம்பிப்பதில் மகாநாயக்க தேரர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தகைய முயற்சிக்குத் தேவையான ஒழுங்கமைப்புகளையும் ஆதரவையும் வழங்குவதற்காக சிரேஷ்ட பௌத்த தலைவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.




