2022 போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது – ஜனாதிபதி அநுர உறுதி

Anura Kumara Dissanayake 2022 ஆம் ஆண்டைப் போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் நாட்டில் ஒருபோதும் ஏற்படாது என்று வலியுறுத்தியுள்ளார்.
நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை (22) கலந்து கொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாசார நிலையத் திட்டம் 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்டத்தின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 945.04 மில்லியன் ரூபாவாகும். இதில் 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதி தேவைக்கேற்ப வழங்கப்படவுள்ளதுடன், திட்டம் 2027 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பேர்கர் உள்ளிட்ட அனைத்து மக்களினதும் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கம் எனக் குறிப்பிட்டார்.
இனவாத அரசியலை தோற்கடித்து, ஒற்றுமையை கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே மக்கள் தமக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீண்டும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், அரசியல் அதிகாரத்தில் இருந்து இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயங்களை ஒழிக்கும் பணியில் அரசாங்கம் உறுதியாக செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கும் சட்டம் சமமாக அமுல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், எவரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்றார்.
பொருளாதார நிலைமை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை போன்ற வெளிப்புற காரணிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன என்றாலும், அவற்றை முகாமைத்துவப்படுத்த அரசாங்கத்திடம் தேவையான ஆளுமை உள்ளதாக தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் நாட்டில் ரூபாயும் டொலரும் இல்லாத நிலை காணப்பட்டதாக நினைவூட்டிய அவர், தற்போது மத்திய வங்கியில் கிட்டத்தட்ட 7,000 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு உள்ளதாகவும், மேலும் 700 மில்லியன் டொலர்கள் விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் கூறினார்.
எரிபொருள், எரிவாயு, பால்மா மற்றும் உரங்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் மக்களுக்கு உறுதியளித்தார்.
தற்போது சில பொருளாதார அழுத்தங்கள் காணப்பட்டாலும், 2022 போன்ற நிலைமை ஒருபோதும் மீண்டும் உருவாகாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதிபட தெரிவித்தார்.




