தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் உண்மையான ஒற்றுமைக்கான கலங்கரை விளக்கமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் திகழ்ந்தார் – ரவூப் ஹக்கீம் எம்பி

இலங்கை அரசியலில் தற்போதைய சூழலில் இனரீதியான துருவப்படுத்தல் என்பது தவிர்க்க முடியாததொரு பலவீனமான அமைப்பியல் அம்சமாக மாறியுள்ள போதிலும், அந்த நியாயங்களுக்கும் அரசியல் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் உண்மையான ஒற்றுமைக்கான கலங்கரை விளக்கமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் திகழ்ந்தார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான Rauff Hakeem தெரிவித்துள்ளார்.
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவஞ்சலி மற்றும் “கிழக்கின் ஊடக முதுசொம்” புத்தக வெளியீட்டு விழா நேற்று கொழும்பு தமிழ் சங்கம் சங்கரம்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் தற்போதைய அரசியல் போக்குகள் துரதிர்ஷ்டவசமாக இனவாதம் மற்றும் குறுகிய பிரதேசவாத எல்லைகளுக்குள் ஊடகவியலாளர்களையும் அரசியல்வாதிகளையும் துருவப்படுத்தி வருவதாகவும், இது நாளாந்தம் அமைப்பு ரீதியாகக் காணப்படும் ஒரு நிலையாக மாறியுள்ளதாகவும் கூறினார்.
இத்தகைய பின்னணியில், தமிழ் பேசும் சமூகங்களின் நீண்டகால இருப்புக்கான சித்தாந்தங்களை சலீம் போன்ற ஆளுமைகள் தமது நடுநிலையான எழுத்துக்களின் மூலம் பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கும் சலீம் அவர்களுக்கும் இடையில் ஆழமான அரசியல் மற்றும் கொள்கை ரீதியான நெருக்கம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எவ்விதமான அரசியல் நெருக்கடியான சூழலிலும் மனிதநேயத்தை முன்னிலைப்படுத்தி, நகைச்சுவை பண்பின் மூலம் ஆளுமைகளை நெறிப்படுத்தும் சிறப்பு குணம் சலீமிடம் இருந்ததாகவும், ஊடகத் துறையின் வர்த்தகமயமாக்கல் அதிகரித்துள்ள இக்காலத்தில் அவரது நேர்மை முக்கியமான எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் கூறினார்.
இறுதியாக, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக ஆண்டுதோறும் ஒரு கள நிருபருக்கு சலீம் அவர்களின் பெயரில் விருது வழங்குவதற்கான நிதிப் பொறுப்பையும் வாழ்வாதார ஏற்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் அறிவித்தார்.




