பணப் பரிமாற்ற தொழில்நுட்பப் பிழை குறித்து மக்கள் வங்கி விளக்கம்

People’s Bank தனது பணப் பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிதியிழப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை காரணமாக, சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உரிய தொகையை விட அதிகமான பணத்தைப் பெற்றுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த பிழை தற்போது முழுமையாகக் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கண்டறியப்பட்ட உடனேயே முழுமையான உள்ளக மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வங்கியின் செயற்பாட்டு கட்டுப்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், Central Bank of Sri Lanka உள்ளிட்ட ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரிகளின் ஆலோசனையின் கீழ் இந்த விடயம் தற்போது மேலதிகமாக மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பப் பிழையால் ஏற்பட்டுள்ள மொத்த நிதி இழப்பு சுமார் 656 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த இழப்புத் தொகை ஏற்கனவே அந்தந்த காலப்பகுதிக்கான வங்கியின் நிதி அறிக்கைகளில் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இனி மேலதிக நிதி பாதிப்புகள் ஏற்படாது என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
தவறுதலாக அதிகளவு பணம் பெற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து அந்தத் தொகையை மீட்டெடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் வங்கி குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் வங்கியின் மொத்த நிதி நிலைத்தன்மை, இலாபம் அல்லது வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை பாதுகாப்பு ஆகியவற்றில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் வங்கி வலியுறுத்தியுள்ளது.
மேலும், வங்கியின் அன்றாட சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழக்கம்போல எந்தத் தடையும் இன்றி இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3.8 டிரில்லியன் ரூபாய் சொத்துத் தளத்தைக் கொண்ட மக்கள் வங்கி, தனது செயல்பாட்டு நேர்மை மற்றும் வாடிக்கையாளர் சேவையின் உயர்தரத்தைக் தொடர்ந்து பேணுவதாக மீண்டும் உறுதியளித்துள்ளது.




