EN
Local

இலங்கை ஊடகத் தொழில்முறை நிபுணர்கள் பட்டய நிறுவனம் அமைப்பதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

இலங்கையில் ஊடகத் துறையின் தரம் மற்றும் தொழில்முறை நெறிமுறைகளை மேம்படுத்தும் நோக்கில், “இலங்கை ஊடகத் தொழில்முறை நிபுணர்கள் பட்டய நிறுவனம்” (Chartered Institute of Media Professionals of Sri Lanka) அமைப்பதற்கான சட்டமூலம் அரசாங்கத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 5 ஆம் திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தின் மூலம், ஊடகத் துறையில் ஈடுபடும் நிபுணர்களுக்கான தொழில்முறை தரநிலைகளை அறிமுகப்படுத்தி, அவற்றை ஊக்குவித்து மற்றும் பேணுவதற்கான சட்டபூர்வ நிறுவனமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழில்முறை நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துதல், பயிற்சிகள் வழங்குதல், தொழில்முறை ஒழுக்க நெறிகளை வலுப்படுத்துதல் மற்றும் ஊடகத் துறையின் தரத்தை உயர்த்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டமூலத்திற்கு அமைச்சரவை முன்னதாக கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்கியிருந்ததுடன், சட்ட வரைவாளர் திணைக்களம் தயாரித்த இறுதி வரைவு சட்டமா அதிபரின் அனுமதியையும் பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

See More

Related Articles

Back to top button