இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கும் கியூப தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்க உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான கியூப தூதுவர் Patricia Lazara Cuesta அவர்களுக்கும் இடையில் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில், Sunil Kumara Gamage தலைமையிலான இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை நினைவுகூர்ந்த அமைச்சர் சுனில் குமார கமகே, இரு நாடுகளின் சட்டமன்றங்களுக்கு இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தையும் ஜனநாயக ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த கியூப தூதுவர் பட்ரீசியா லசாரா குவேரா, சுகாதாரம், விளையாட்டு, விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு சங்க உறுப்பினர்களுக்கிடையில் நெருங்கிய தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் மெய்நிகர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கியூபாவின் முன்னாள் தலைவர் Fidel Castro அவர்களின் பிறந்த தின நூற்றாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை கியூபாவிற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கியூபா தற்போது எதிர்கொண்டு வரும் நிலைமைகள் குறித்தும் தூதுவர் விரிவாக விளக்கமளித்தார்.




