மின் கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகள் வெட்டும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்க வேண்டும் – யாழ். மாவட்ட செயலர்

யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை வெட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபையினருக்கு யாழ். மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டத்தில், மின் கம்பிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி மின்சார சபையினர் மரக்கிளைகளை கண்மூடித்தனமாக வெட்டி வீதிகளில் கைவிட்டு செல்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் மரக்கிளைகளை வெட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, சம்பந்தப்பட்ட பிரதேச உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மாநகர பிரதி முதல்வர், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.




