இலங்கையில் நல்லிணக்கத்திற்குத் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – பிரித்தானியா வலியுறுத்தல்

இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்றுடன் (மே 18) 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், போரில் உயிரிழந்த மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் நினைவுகூரப்பட்டனர்.
இதனை முன்னிட்டு இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதலின் போது உயிரிழந்த மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல், 17 ஆண்டுகளாக இன்னும் அவர்களைத் தேடி வரும் குடும்பங்களை இன்று நாம் நினைவுகூருகிறோம்.
நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் நீடித்த சமாதானத்தையும் உருவாக்குவதற்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அர்த்தமுள்ள முன்னேற்றம் அவசியமாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கவலைகள் மற்றும் நீதி கோரிக்கைகள் உரிய முறையில் தீர்க்கப்படுவது மட்டுமே நாட்டில் நீடித்த நல்லிணக்கத்திற்கான அடித்தளமாக அமையும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




