நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 நாட்கள் விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தன் மகோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பாக, ஆலய சம்பிரதாய முறைப்படி பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையினரிடம் கையளிக்கப்பட்டது.
ஆலய கணக்குப்பிள்ளையால் பாரம்பரிய முறைப்படி கையளிக்கப்பட்ட இந்த விழா அறிவித்தலை யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மதிவதனி மற்றும் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மகோற்சவ காலத்தில் ஆலய சூழல் பராமரிப்பு, பக்தர்களுக்கான அத்தியாவசிய வசதிகள், சுகாதார சேவைகள், போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் வீதி தடைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை யாழ்ப்பாண மாநகர சபை முன்னெடுக்கவுள்ளது.
இந்த நிகழ்வு பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் திகதி 24ஆம் திருவிழாவாகிய மகத்தான தேர் திருவிழா நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.




