“கரப்பான் மக்கள் கட்சி” : இந்திய இளைஞர்களின் கோபத்தை வெளிப்படுத்திய புதிய இணைய அரசியல் இயக்கம்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சிரமங்கள் மற்றும் அரசியல் அதிருப்தி காரணமாக இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள “Cockroach Janta Party (CJP)” எனப்படும் இணையவழி நகைச்சுவை அரசியல் இயக்கம் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொது தொடர்பியல் துறையில் கல்வி முடித்த 30 வயதான அபிஜீத் டிப்கே (Abhijeet Dipke) என்பவரே இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சாதாரண நகைச்சுவை கருத்தாகத் தொடங்கிய இந்த முயற்சி, தற்போது ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களின் ஆதரவைப் பெற்று ஒரு சமூக அரசியல் எதிர்ப்புச் சின்னமாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த வெள்ளிக்கிழமை திறந்த நீதிமன்ற அமர்வொன்றில் தெரிவித்த கருத்துகள் அமைந்துள்ளன. வேலைவாய்ப்பின்றி இருக்கும் சில இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” என ஒப்பிட்டு அவர் கருத்து வெளியிட்டிருந்தார். மேலும், “சிலர் வேலை கிடைக்காமல் ஊடகம், சமூக ஊடகம் அல்லது செயற்பாட்டாளர்களாக மாறி அமைப்புகளை தாக்குகின்றனர்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துகள் இந்திய இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. பின்னர் தலைமை நீதிபதி தனது கருத்து இளைஞர்களை முழுமையாக குறிவைத்ததல்ல என்றும், போலியான பட்டங்கள் பெறுவோரைக் குறிப்பிட்டே கூறியதாகவும் விளக்கம் அளித்தார். இருந்தாலும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் தீவிரமாக பேசப்பட்டது.
இந்த சூழலில் அபிஜீத் டிப்கே தனது X (முன்னாள் Twitter) சமூக ஊடகத்தில், “எல்லா கரப்பான்களும் ஒன்றாக இணைந்தால் என்ன ஆகும்?” என பதிவிட்டார். அதன்பின்னர் “Cockroach Janta Party” எனும் பெயரில் இணையதளம் மற்றும் சமூக ஊடக கணக்குகள் உருவாக்கப்பட்டன.
இந்தப் பெயர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் “Bharatiya Janata Party (BJP)” கட்சியை நகைச்சுவையாக மாற்றிய வடிவமாகக் கருதப்படுகிறது. “Janta” என்ற இந்தி சொல் “மக்கள்” என்று பொருள்படும்.
டிப்கே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை கரப்பான்கள், பராசிட்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அழுகிய இடங்களில்தான் கரப்பான்கள் பெருகுகின்றன. இன்று இந்தியா அப்படியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
மூன்று நாட்களுக்குள் இந்த இயக்கத்தின் Instagram பக்கம் 11 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளது. மேலும் 350,000-க்கும் அதிகமானோர் Google படிவம் மூலம் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான BJP-யின் Instagram பின்தொடர்பாளர்களை விட இது அதிகம் என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.
இந்த இயக்கத்திற்கு சில எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிர்தி ஆசாத் உள்ளிட்டோர் இதில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு மற்றும் சமூக பிரிவினை அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக Gen Z தலைமுறையினரிடையே அரசியல் அதிருப்தி அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 8 மில்லியன் பட்டதாரிகள் உருவாகினாலும், அவர்களுக்கிடையிலான வேலைவாய்ப்பின்மை விகிதம் 29 சதவீதத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் “Cockroach Janta Party” ஒரு அரசியல் கட்சியைவிட இளைஞர்களின் மனக்கசப்பையும் சமூக அதிருப்தியையும் வெளிப்படுத்தும் இணைய இயக்கமாக பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்சியின் நகைச்சுவைத் தன்மையும் சமூக விமர்சனங்களும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. “வேலைஇல்லாதவர்”, “சோம்பேறி”, “எப்போதும் ஆன்லைனில் இருப்பவர்”, “தொழில்முறை முறையில் புலம்பக்கூடியவர்” ஆகியோர் உறுப்பினராக தகுதி பெறுவார்கள் எனக் கட்சியின் நகைச்சுவை விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
அதன் கோஷமாக, “இளைஞர்களால், இளைஞர்களுக்காக, இளைஞர்களின் அரசியல் முன்னணி – மதச்சார்பற்றது, சமூகவாதம், ஜனநாயகம், சோம்பேறித்தனம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளான ChatGPT மற்றும் Claude போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக அபிஜீத் டிப்கே தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்திற்குள் இணையதளம், கட்சிக் கொள்கை மற்றும் சமூக ஊடக பிரசாரங்களை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக விமர்சகர்கள் பலர், இது வெறும் நகைச்சுவை அல்ல; இந்திய இளைஞர்களின் அரசியல் விரக்தியின் வெளிப்பாடாக மாறிவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.
அதேவேளை, இந்தியாவில் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அரசியல் சுதந்திரம் குறித்த விவாதங்கள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பான கேள்விகளும் இந்த விவகாரத்துடன் இணைத்து பேசப்பட்டு வருகின்றன.
“Cockroach Janta Party” தற்போது ஒரு நகைச்சுவை இயக்கமாகத் தோன்றினாலும், இந்திய இளைஞர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் புதிய இணைய அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பமாக இது மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




