2½ மாதக் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது – எல்பிட்டியில் அதிர்ச்சி சம்பவம்

எல்பிட்டி, கஹதூவை, துடுவெகொடை பிரதேசத்தில் தனது இரண்டரை மாதக் குழந்தையைக் கிணற்றுக்குள் வீசியதாக சந்தேகத்தின் பேரில் ஒரு தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, சந்தேகநபரான தாய் குழந்தையைக் கிணற்றில் வீசிய பின்னர் “குழந்தையைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டேன்” என கூச்சலிட்டுள்ளார்.
இதனை கேட்டு உடனடியாகச் செயற்பட்ட குழந்தையின் தந்தை, கிணற்றுக்குள் மிதந்த நிலையில் இருந்த குழந்தையை மீட்டெடுத்து அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
குறித்த கிணறு ஆழமற்றதாக இருந்ததால், குழந்தையை விரைவாக மீட்டு உயிர் காப்பாற்ற முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் நிலைமை தற்போது ஆபத்தானதாக இல்லை எனவும் எல்பிட்டிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




