போர் வீரர்கள் நினைவுத் தூபி அருகே விமல் வீரவன்ச – பொலிஸார் இடையே பதற்றம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பொலிஸாருக்கு இடையில் இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபி அருகே பதற்றமான நிலை ஏற்பட்டது.
போர் வீரர்களை நினைவுகூரும் நோக்கில் மலர்க் கொத்துகளுடன் நினைவிடத்திற்கு சென்ற விமல் வீரவன்ச மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு, நினைவுத் தூபிக்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விமல் வீரவன்ச தரப்பினரும் பொலிஸாரும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது விமல் வீரவன்ச தற்போதைய அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
பொலிஸாரின் தடையை மீறி நினைவிடத்திற்குள் செல்ல முயன்ற குழுவினரை தடுக்க பொலிஸார் தீவிரமாக செயல்பட்டதால், இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை உருவானது.
எனினும், இறுதியில் நினைவுத் தூபிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படாததால், நினைவிடத்தின் நுழைவாயிலிலேயே மலர்க் கொத்துகளை வைத்து விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.




