EN
Local

உயர்கல்வி வாய்ப்பை நாட்டின் சேவைக்காக பயன்படுத்துங்கள்,பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக மட்டும் பார்க்க வேண்டாம் எனவும், அதனை தனிப்பட்ட முன்னேற்றத்துடன் இணைத்து நாட்டின் சேவைக்காகவும் பயன்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், மகாபொல பழைய மாணவர் இணையதளம் உத்தியோகபூர்வமாகவும் திறந்து வைக்கப்பட்டது.

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 2023–2024 கல்வியாண்டுக்கான புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மறைந்த லலித் அத்துலத்முதலி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மகாபொல நிதியம், நாட்டில் மிகப் பிரபலமானதும் மதிப்புமிக்கதுமான தேசிய நிதியமாகும் என பிரதமர் குறிப்பிட்டார். இதுவரை சுமார் 5 இலட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகவும், அவர்கள் பல்வேறு துறைகளில் சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பழைய மாணவர்களையும் தற்போதைய மாணவர்களையும் இணைக்கும் இந்த புதிய இணைய தளம், அனுபவ பகிர்வு மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் ஆரம்பக் கல்வியுடன் ஒப்பிடும்போது உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஒரு முக்கிய பிரச்சினை என பிரதமர் சுட்டிக்காட்டினார். சாதாரண தரத்துக்குப் பிறகு கல்வியைத் தொடரும் மாணவர்கள் குறைவது கவலைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

உயர்கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவது மட்டுமல்ல; அது தொழில்முறை திறனையும் பரந்த பார்வையையும் உருவாக்கும் ஒரு வாய்ப்பு எனவும் அவர் வலியுறுத்தினார்.

மகாபொல கொடுப்பனவுகள் கடந்த காலத்தில் தாமதமானிருந்தாலும், தற்போது அவை சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக மாதாந்தம் 5,000 ரூபாவாக இருந்த மகாபொல கொடுப்பனவு, 10,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது 2026 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பிரதமர் அறிவித்தார்.

மகாபொல நிதியத்தை வெறும் நிதி உதவியாக மட்டும் அல்லாது, வழிகாட்டல் மற்றும் பழைய மாணவர் வலையமைப்பு மூலம் மேம்படுத்தப்படும் ஒரு தளமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக மட்டும் அல்லாது நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Articles

Back to top button