அரசாங்கம் மக்களின் நலனுக்காகவே தொடர்ந்து செயற்படும்

ஒரு சில சிறிய குழுக்களின் கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் என்னும் தொனிப்பொருளில் நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளித் தாக்கத்தினால் பெருந்தோட்டத் தொழில் துறை பாரியளவில் பாதிக்கப்பட்டது. உழைக்கும் மக்களின் வீடுகள் பலவும் சேதமடைந்தன.
எனினும், உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான இழப்பீட்டுத் தொகையை வழங்க இந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது இந்நாட்டு மக்களே. மக்களின் பலமான நம்பிக்கையினாலேயே அரசாங்கம் இன்றும் ஸ்திரமாக உள்ளது.
அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு 10 முதல் 15 பேர் அடங்கிய சிறிய குழுக்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். மக்கள் விசுவாசத்தை வென்ற ஓர் அரசாங்கத்தை இவ்வாறான சிறிய குழுக்களின் கூச்சல்களால் வீழ்த்திவிட முடியாது.
அரசாங்கம் மக்களின் நம்பிக்கையுடன் பலமாக இருப்பதோடு, மக்களின் நலனுக்காகவே தொடர்ந்தும் செயற்படும்.
அரசாங்கத்தை விரட்ட எண்ணும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தாலும் கூட அரைப்பங்கு மக்களையேனும் அவர்களால் திரட்ட முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.




