நுவன் துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப்பெறப்பட்டது

2026 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக, தமக்கு “தடையின்மைச் சான்றிதழை” வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி கிரிக்கெட் வீரர் நுவன் துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (23) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து மீளப் பெறப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இதன்போது, ஐபிஎல் தொடரின் பல போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், இந்த கோரிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தமது கட்சிக்காரர் விரும்பவில்லை என்றும், எனவே, மனுவை மீளப்பெற அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, குறித்த மனுவை மீளப் பெறுவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.




