மாவிலாறு பிரதான மதகு – சிறுபோகச் செய்கைக்காக நீர் விநியோகிக்க நடவடிக்கை

சமீபத்தில் ஏற்பட்ட ‘திட்வா’ வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்திருந்த மாவிலாறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபோகச் செய்கைக்காக நீர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (30) சுப வேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அல்ல குடியேற்றத் திட்டத்திற்குச் சொந்தமான சுமார் 40,000 ஏக்கர் வயல் நிலங்கள் இந்த மாவிலாறு நீர்த்தேக்கத்தின் மூலமே நீர் வசதியைப் பெறுகின்றன. சேருவில, வெருகல் மற்றும் மூதூர் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 10,000 விவசாயக் குடும்பங்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக மாவிலாறு நீர்த்தேக்கத்தையே நம்பியுள்ளனர்.
எனினும், அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ வெள்ளப் பெருக்கு காரணமாக மாவிலாறு நீர்த்தேக்கமும் அதன் அணைக்கட்டும் முழுமையாக சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட நீர்த்தேக்கத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதன் முக்கிய கட்டமாக எதிர்வரும் சிறுபோகம் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரதான மதகை புனரமைக்கும் பணிகள் விரைவாக நிறைவு செய்யப்பட்டன.
இதற்கமைய, அல்ல திட்டத்திற்கு நீரை விநியோகிப்பதற்கான பிரதான மதகின் புனரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, இன்று (30) நீர் திறந்துவிடப்பட்டது.




