ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அளிக்கப்பட்ட அனுமதி நீட்டிக்கப்படாது

ஈரானுடனான போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது. இதனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா, 30 நாட்களுக்கு அனுமதி அளித்தது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும் வரி விதிக்கப்படாது என்று கூறி விலக்கு அளித்து இருந்தது.
இந்தியாவுக்கு கடந்த மார்ச் 5ஆம் திகதி தற்காலிக அனுமதி அளித்தது. இந்தத் தடையில் இருந்து மேலும் சில நாடுகளுக்கும் அமெரிக்கா விலக்களித்திருந்த நிலையில், அது கடந்த 11ஆம் திகதியுடன் காலாவதியானது.
இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்கொட் பெசன்ட், ‘ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை அமெரிக்கா நீட்டிக்காது’ என்று தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் ரஷ்யாவிடம் அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.




