இலங்கை – கியூபா நட்புறவை மேலும் வலுப்படுத்த உறுதி

கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (06) நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் 65 வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் நெருக்கமான, வலுவான உறவுகளை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இலங்கைக்கான கியூப தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை நினைவு கூர்ந்தார். கியூபாவின் தலைவர்களான ஃபிடெல் கஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா ஆகியோருக்கு தனது மரியாதையைச் செலுத்திய அவர், சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொடர்ச்சியான அமர்வுகள் உள்ளிட்ட பல்தரப்புத் தளங்களில் கியூபா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுகளுக்கும் சபாநாயகர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.




