ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்ஸ் அப் இன் ஊடாக அந் நிறுவனத்தின் சேவை என நம்ப வைத்து மூன்று போலி இணையத்தளங்கள் மூலம் ஸ்ரீலங்கன்.ஏபிகே எனும் தொலைபேசி செயலியை தரவிறக்கம் செய்யத் தூண்டுவதனூடாகவே இந்த மோசடி அரங்கேறுகிறது.
இந்தச் செயலியானது அபாயகரமான பேங்கிங் ட்ரோஜன் மென்பொருள் எனவும் இதனை நிறுவுவதன் மூலம் தொலைபேசியை தூரத்திலிருந்து கட்டுப்படுத்தும் அனுமதியை மோசடியாளர்கள் பெறுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணப் பரிமாற்றத்தைச் செய்ய வைத்து, கடவுச்சொல், வங்கிக் கணக்கு விபரங்கள், கணக்கு விபரங்கள், உறுதிப்படுத்தல் தரவுகளைப் பெற்று சட்டவிரோதமாக வங்கிக் கணக்குகளுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
இதற்காக 077 45 58 361, 011 7771979, 074 1142208, 077 5791209 மற்றும் 074 3268200 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் பயன்படுத்துகின்றன.
எனவே இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




