EN
Local

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் குழந்தை விற்பனை முயற்சி: மூவர் கைது

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில், ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை ரூ.50,000க்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில், குழந்தையின் தாய் மற்றும் தந்தை என கூறப்படும் ஆண் ஒருவரும், குழந்தையை வாங்கிய பெண்ணும் ஆகிய மூவர், அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ விவரம்

மேலும் விசாரணைகளில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த பெண்ணும், அவருடன் வந்த ஆண் ஒருவரும் புன்னை நீராவி பகுதியில் உள்ள ஒருவரைச் சந்திக்க வந்துள்ளனர். அங்கு, தமக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அதில் ஒரு குழந்தையை வளர்க்க முடியாத நிலை காரணமாக விற்பனை செய்ய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் உண்மையானவையா அல்லது போலியானவையா, குழந்தை உண்மையில் இவர்களுடையதா அல்லது வேறு யாருடையதா என்பதையும் உட்பட பல கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகைப்படங்களும் சான்றுகளும்

குழந்தையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் போல இரு தரப்பினரும் தயாராகி, சம்பவத்திற்கான சான்றுகளாக புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தலையீடு

சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தலையிட்டு, சந்தேக நபர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் தகவல்கள்

விசாரணைகளில் தெரியவருவதாவது, குழந்தையை பெற்றுக்கொண்ட பெண், குழந்தையுடன் கொழும்பு நோக்கி புறப்படத் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button