EN
Sports

ஐதராபாத் அணியிடம் அடிபணிந்த மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2026 தொடரில் நேற்று இடம்பெற்ற பரபரப்பான போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றுமொரு அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

குறித்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, ரையான் ரிக்கெல்டனின் முதல் ஐபிஎல் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும், சன்ரைசர்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையிலேயே இந்த இலக்கை எட்டி சாதனை படைத்தது.

ஐதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அபிஷேக் சர்மா (45) மற்றும் டிராவிஸ் ஹெட் (76) ஜோடி முதல் விக்கெட்டுக்காக 129 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பை பந்துவீச்சை நிலைகுலையச் செய்தது.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களாலும் இக்கட்டமைப்பை உடைக்க முடியவில்லை. பவர்பிளே ஓவர்களிலேயே ஐதராபாத் அணி 92 ஓட்டங்களை விளாசியது.

இந்த நிலையில், தனது அணி இவ்வளவு பெரிய ஓட்டங்களைப் பெற்றும் தோல்வியடைவதைப் பார்த்த முன்னாள் அணித்தலைவர் ரோஹித் சர்மா, ஓய்வறையில் மிகவும் திகைப்புடனும் கவலையுடனும் அமர்ந்திருந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோல்வி குறித்துப் பேசிய மும்பை அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா, “எமது பந்துவீச்சு வளங்கள் தற்போது சவாலை எதிர்நோக்கியுள்ளன. இதற்கான தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும். பந்துவீச்சாளர்களை மட்டும் நான் குறை கூறமாட்டேன், ஒட்டுமொத்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தரத்திற்கு ஏற்ப நாம் விளையாடவில்லை,” எனத் தெரிவித்தார்.

இந்தத் தோல்வியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி வெறும் 4 புள்ளிகளுடன் பட்டியலில் பின்தங்கியுள்ளது. மறுபுறம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 போட்டிகளில் 12 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related Articles

Back to top button