பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுவிப்பு

நுவரெலியாவில் நபர் ஒருவரைத் துப்பாக்கியால் மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (22) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் புஷ்பிகா ஜயதாச இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், கடுமையான நிபந்தனைகளுடன் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கவும், தொடர்புடைய துப்பாக்கியை வழக்கு சான்றுப் பொருளாக நீதிமன்றப் பொறுப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.
சந்தேகநபரின் வெளிநாட்டுப் கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.




