காயமடைந்த மீனவரை மருத்துவ சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர உதவி

இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில், காயமடைந்த உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவரை, கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், கடற்படை படகொன்றினால் சிகிச்சைக்காக அவசரமாகக் கரைக்கு கொண்டு வந்து, உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
6 மீனவர்களுடன் கூடிய ‘லக்ஷித 5’ என்ற பல நாள் மீன்பிடிப் படகு, குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, இலங்கைக்குக் கிழக்கே சுமார் 75 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. படகில் இருந்த மீனவர்களில் ஒருவருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படைக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம், கொழும்பு கடற்படைத் தளத்தில் உள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்தது.
கடற்படை உடனடியாகப் பதிலளித்து, மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர, கிழக்குக் கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த ஒரு கடற்படைக் கப்பலை அப்பகுதிக்கு அனுப்பியது.
பின்னர் கடற்படையினர், காயமுற்ற அந்த மீனவருக்கு அடிப்படை முதலுதவி அளித்து, அவரை விரைவாக திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு வந்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், கொழும்பு கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம், இலங்கை கடல் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடர்ப்பாட்டில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




