யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று (24) அழைக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு இணையாக மற்றுமொரு வழக்கு இலக்கம் 08 மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குிறத்த வழக்கிற்காக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வழக்கிற்கும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக திகதியொன்றை வழங்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, இந்த வழக்கினை ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் இது தொடர்பான முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.




