விபத்தில் சிக்கிய 10 மாணவர்களின் நிலை கவலைக்கிடம்

பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், காயமடைந்த மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதன் பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்தார்.
பயணத்தில் இருந்த தனியார் பேருந்தின் பிரேக் தொகுதியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, பேருந்தைக் கட்டுப்படுத்துவதற்காக சாரதி அதனை வீதியோரத்திலிருந்த மண் திட்டில் மோதச் செய்து நிறுத்த முற்பட்ட போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
கடுமையாகக் காயமடைந்துள்ள 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.




