கேகாலை மாவட்ட மதுபான நிலையங்களுக்கு பூட்டு

கேகாலை மாவட்டத்தில் “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” நடைபெறவுள்ள காலப்பகுதியில்,வீதியோரங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை 3 நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது நாளை 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.
கடுகண்ணாவ முதல் வரக்காப்பொல வரையான பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கே இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டச் செயலகத்தில் நேற்று ( 22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைச்சரும் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
சபரகமுவ மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.




