ஈரான் மோதல் முடிவுக்கு வருமா? மீண்டும் பேச்சுவார்த்தையா?

ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அரபிக்கடலில் ஹோர்முஸ் நீரிணை பகுதியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சரக்கு, கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, பேச்சுவார்த்தைக்காக 2 வாரங்கள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். அதன்படி கடந்த 8ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டது. அதன்படி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 11, 12 ஆகிய திகதிகளில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அதேவேளை, 2 வார போர் நிறுத்த ஒப்பந்தம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால் ஈரான் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானில் இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




