மஹரகம வீட்டு தீ விபத்து – காரணம் வெளியாகியது

மஹரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (18) மாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டின் வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக வீட்டின் உரிமையாளராலேயே தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு இருந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு நிலவி வந்தமை தொடர்பாக மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹரகம – பமுனுவ வீதியில் உள்ள வீடொன்றின் மேல் தளத்திலேயே நேற்று மாலை இந்தத் தீ பரவியது.
பின்னர் அதனைக் கண்ட பிரதேச மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது வீட்டிற்குள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி இருந்த இரண்டு ஆண்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வீட்டின் உரிமையாளரும், வாடகைக்கு தங்கியிருந்த குடும்பத்தின் தலைவருமே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.
எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வீட்டின் அறையொன்றிற்குள் குறித்த குடும்பத் தலைவரின் 55 வயது மனைவியும் 16 வயது மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாகக் மீட்கப்பட்டனர்.
அதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயதான வீட்டின் உரிமையாளரும் இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



