EN
International

தமிழக தேர்தல் ஆணையத்துக்கு விஜய் விடுத்த அவசர கோரிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய பேருந்து அல்லது பொது போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அவர்கள் எல்லோரும் தங்களது வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய போக்குவரத்து ஏற்பாட்டை செய்யும் வகையில் மாநில போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த வாக்குச்சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இருப்பினும் வாக்குப்பதிவு செயல்முறை மிகவும் தாமதமாக இருப்பதாக தகவல். அதை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளின் தேர்தல் மேற்பார்வை அதிகாரி பார்வையிட்டு, விரைவு படுத்த வேண்டும்.

மேலும், வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும். இது போக்குவரத்து பிரச்சினையில் சிக்கிய வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கும்.

அந்த வகையில் இரவு 8.00 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அந்த திருத்தப்பட்ட நேரத்துக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரும் வாக்கினை செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button