கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரத் தடுப்புக்காவல் விசாரணை

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய ராஜு’ என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (18) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக இலங்கையிலுள்ள நீதிமன்றங்களால் 15 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, 26 வெளிநாட்டுப் பயணத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.
மீட்டியாகொட, கரன்தெனிய, பலப்பிட்டிய மற்றும் தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள், பாரிய காயங்களை ஏற்படுத்தியமை, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்காக இவர் தேடப்பட்டு வந்தவராவார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் நேரடி மேற்பார்வையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.




