EN
International

சோகத்தில் தொடங்கிய புத்தாண்டு… தாய்லாந்தில் 191 பேர் பலி

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில், அறுவடைத் திருவிழாவிற்குப் பிறகு தாய்லாந்து மக்கள் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.

1 வார காலம் கொண்டாடப்படும் இது சோங்க்ரான் (Songkran) பண்டிகை என்று அழைக்கப்படுகிறது.

இதன்போது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் குடும்பத்துடன் பயணம் செய்வது வழக்கம்.

இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வு ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி விளையாடும் தண்ணீர் திருவிழா ஆகும்.

இது கடந்த கால பாவங்களை கழுவி புத்தாண்டை வரவேற்பதை குறிக்கிறது.

‘சோங்க்ரான்’ என்ற சொல் சமஸ்கிருதத்தின் ‘சங்கராந்தி’ என்ற சொல்லிலிருந்து உருவானது. இந்தியாவில் கொண்டாடப்படும் மகர சங்கராந்தியுடன் ஒத்தது இது.

சோங்க்ரானின் இந்த ஒரு வாரக் காலத்தை அந்நாட்டு மக்கள் “ஏழு ஆபத்தான நாட்கள்” என்று அழைக்கிறார்கள்.

இந்த ஆண்டு சோங்க்ரான் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி ஆரம்பமாகியது.அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் இந்த ஒரு வார காலத்தில் சுமார் 951இற்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் அங்கு பதிவாகியுள்ளன.

இந்த விபத்துகளில் 191 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

42 வீதமான விபத்துகள் வாகனங்களை வேகமாக ஓட்டியதால் நிகழ்ந்துள்ளன. 27.4 வீதமான விபத்துகளுக்கு மது ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது.

மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்திலேயே அதிகப்படியான விபத்துகள் நடப்பதாக அந்நாட்டின் பேரிடர் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்துகள் ஒருபுறம் இருந்தாலும், தாய்லாந்து பொருளாதாரத்திற்கு இந்தப் பண்டிகை சுமார் 940 மில்லியன் டொலர் வருமானம் கொடுக்கிறது.

சுமார் 5 இலட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு பண்டிகைகளை பார்வையிட வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button