EN
Local

போதைப்பொருள் கடத்திய பிக்குகள் விமான நிலையத்தில் கைது

1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறமதியுடைய பெருமளவிலான போதைப்பொருள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின் போதே குறித்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை பொருட்கள் மற்றும் பலவகையான இனிப்புகள் நிரப்பப்பட்ட போலி அடிப்பாகம் கொண்ட சூட்கேஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான குஷ் மற்றும் ஹாஷிஷ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில் ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அனுசரணையாளர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 அன்று பாங்காக்கிற்குப் பயணம் செய்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைபேசி ஆதாரங்கள் காட்டியதாகக் கூறப்படுகிறது

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனக் கூறப்படும் சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related Articles

Back to top button