Local
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி நல்லூரில் இருந்து ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு ஊர்தி பவனி இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிட முன்றலில் இருந்து ஆரம்பமானது.
இந்த நினைவு ஊர்தி பவனியானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, எதிர்வரும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
ஊர்தி பவனியின் ஆரம்ப நிகழ்வின் போது, தியாக தீபம் நினைவிட வளாகத்தில் பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





